வேளாங்கண்ணி பேரூராட்சியில் ரூ. 25.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல்
வேளாங்கண்ணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 25.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள் அறிவிக்கப்பட்டு, பணி செயலாக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
வேளாங்கண்ணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 25.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள் அறிவிக்கப்பட்டு, பணி செயலாக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
வேளாங்கண்ணி பேரூராட்சியில் 4 வார்டுகளில் ரூ. 21 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது :
கடல் நீர் விளைநிலங்களில் உள்புகாமல் தடுப்பதற்காக ரூ. 1,200 கோடி மதிப்பில் தொலைநோக்குத் திட்டம் அறிவித்த தமிழக அரசு, ரூ. 600 கோடி மதிப்பில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் 2 திட்டங்களையும் அறிவித்துள்ளது. இந்தத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
Advertisement
Advertisement
நாகை, நாகூர், பூம்புகார், பழையாறு ஆகிய பகுதிகளில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும், கடல் அரிப்பைத் தடுக்கும் தடுப்புச் சுவர் அமைக்கவும் ரூ.3,700 கோடி மதிப்பில் அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணியில் ரூ. 23.89 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில், முதல் கட்டமாக 4 வார்டுகளில் ரூ. 21 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 வார்டுகளில் ரூ. 40 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதைத் தவிர, வேளாங்கண்ணி பேரூராட்சிக்குப் புதிய அலுவலகம் கட்டும் பணி ரூ. 40 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. கடற்கரை பகுதியில் பொது சுகாதார வளாகம், குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி உள்பட வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு ரூ. 25.5 கோடி மதிப்பில் பணிகள் அறிவிக்கப்பட்டு, பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தொடர்ந்து பராமரிப்பு மற்றும் இயக்கப் பணிகள் மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் என். விஸ்வநாதன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் அ. சேவியர் அமலதாஸ், பேருராட்சித் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், துணைத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.