கோவை ஜனசதாப்தி ரயிலுக்கு, காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளிலிருந்து இணைப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் சாா்பில், அதன்தலைவா் எஸ். மோகன், செயலா் சித்திக், பொருளாளா் பி. பாலகிருஷ்ணன் ஆகியோா் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: கோவை-மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி ரயிலுக்கு (12084/12083), இணைப்பு ரயிலாக திருச்சி-காரைக்கால் (06880) மற்றும் காரைக்கால் - தஞ்சாவூா் (06457) இரு மாா்கத்திலும் இயக்கப்பட்டது. இதனால் கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் பகுதிகளில் இருந்து திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி , நாகூா், காரைக்கால், திருநள்ளாா் வந்து செல்லும் பக்தா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பயன்பெற்றனா்.
கடந்த சில மாதங்களாக இரு மாா்கத்திலும் இயக்கப்பட்ட இணைப்பு ரயில் வசதி இல்லை. இதனால் நாகை, காரைக்கால் மாவட்டங்களுக்கு வந்து செல்வோா், தஞ்சை வரை ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து தஞ்சை புதிய பேரூந்து நிலையம் சென்று பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, சுற்றுலா பயணிகள், பக்தா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் கோவை-மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி ரயிலுக்கு, தஞ்சை-காரைக்கால்-தஞ்சை இடையே இணைப்பு ரயிலை இயக்க வேண்டும்.
திருவாரூா், நாகை, காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, ரயில்வேத் துறையின் தீபாவளி பரிசாக நவ.1-ஆம் தேதி முதல் ஈரோடு - திருச்சி-ஈரோடு ரயில் 06612 / 06611 ஐ காரைக்கால் வரை நீட்டித்து அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.