திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவைக்குப் பதிலாக குறுகிய கால மாற்றுப் பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் போதுமான அளவு பருவமழை கிடைக்காததால் குறைந்த நீரில் அதிக பரப்பளவில் குறுவைக்கு பதிலாக குறுகிய கால மாற்றுப் பயிர்களான மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சூரியகாந்தி, எள், நிலக்கடலை, உளுந்து மற்றும் காய்கறி பயிர்களை அந்தந்த பகுதிக்கேற்ப தேர்வு செய்து பயிரிடலாம். பயிர் சுழற்சி முறையில் இவ்வாறு சாகுபடி செய்ய முடிவதால் மண் வளம் காக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 425 மில்லி மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் குறுகிய கால பயிர்களான மக்காச்சோளம், கம்பு, கேழ் வரகு, சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிச் செய்ய ஏக்கருக்கு 200 மில்லி மீட்டர் தண்ணீரே போதுமானது.
ஆழ்குழாய் கிணறு உள்ள விவசாயிகள் கோடையில் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு அதிக வருமானம் ஈட்டலாம். குறைந்த செலவில் கூடுதல் லாபம் தரக்கூடிய, திருவாரூர் மாவட்டத்துக்கு ஏற்றப் பயிரான கேழ்வரகை சாகுபடி செய்யலாம்.
இதேபோல், சூரிய காந்தியை 90 நாள்களில் சாகுபடி செய்து பயன்பெறலாம். மேலும், தற்சமயம் பயிர் உற்பத்தி தேவை அதிகளவில் தேவைப்படுகின்ற நிலையில் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு ஆடுதுறை 5 ரக உளுந்து மற்றும் வம்பன் ரகங்களை 70 நாள்களில் சாகுபடி செய்து பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.