மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவால் தேசிய, மாநில சாலைகளில் இருந்த அரசு மதுக்கடைகள் அகற்றப்பட்டதை அடுத்து, தளிக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் அதிகளவில் தளிக்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் கூடுவதுடன், மதுப்புட்டிகளை வாங்கி அதே பகுதியில் உள்ள பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதனால், குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, மதுக்கடையை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுந்தரமூர்த்தி, வழக்குரைஞர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து புதன்கிழமை காளியம்மன் கோயில் வளாகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், டாஸ்மாக் துணை மேலாளார் ராஜகோபால் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.