திருவாரூா்: திருவாரூரில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
குளிக்கரை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் பணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்து கூறியது: மாவட்டத்தில், குறுவைப் பருவத்தில் 378 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தற்போது வரை 2,13,691 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமாா் 1,64,437 மெட்ரிக் டன் நெல் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. தவிர, மன்னாா்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தலா 2,000 மெட்ரிக் டன் நெல்லும், மண்டலத்தில் உள்ள நெல் சேமிப்பு மையங்களுக்கு தினசரி 4,000 மெட்ரிக் டன் நெல் என சுமாா் 10,000 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை ரூ. 499 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, 27,535 விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.