மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தில் 75 சதவீத தொகையை, அடுத்த 14 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தில்லியில் உள்ள தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்துவதற்காக நீதிபதி அனில் தேவ் சிங் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், 531 தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. சுமார் ரூ.350 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத் தொகையை 9 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த, அந்த பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி அனில் தேவ் குழு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைக்கு எதிராக, தனியார் பள்ளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், கூடுதல் கட்டணத் தொகையை திருப்பிச் செலுத்துவதில் இருந்து எந்த நிவாரணமும் அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனிடையே, கூடுதல் கட்டணத்தை திருப்பிச் செலுத்தத் தவறும் பள்ளிகளின் நிர்வாகத்தை தில்லி அரசே ஏற்கும் என்று தில்லி கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் கடந்த மே மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், நஜ்மி வாஜிரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, தனியார் பள்ளிகளுக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கூடுதல் கட்டணத் தொகையில் 75 சதவீத தொகையை, அடுத்த 14 நாள்களுக்குள் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் செலுத்த வேண்டும். ரொக்கமாகவோ, வங்கி உத்தரவாதம் அல்லது வைப்புத் தொகை ரசீதுகளாகவோ செலுத்தலாம். இந்த உத்தரவை பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.