தில்லி நிஹல் விஹார் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
புறநகர் தில்லி, நிஹல் விஹார் பகுதியில் உள்ள லட்சுமி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் புனியா (45). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விமாகக் கொண்ட இவர், அலுமினியம் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் வினோத் புனியா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அறையின் அருகே மற்றொரு அறையில் மனைவி சுஜாதா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இளைய மகன் பிரின்ஸ் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
மனைவி, மகனை கொன்றுவிட்டு வினோத் புனியா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்களும் விசாரணை நடத்தினர். மூவரின் சடலத்தை பிரதேப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். எனினும், இரட்டைக் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து போலீஸாருக்கு இதுவரை உரிய துப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், போலீஸார் கொலை ஏன் நடந்தது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையில் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து புறநகர் மாவட்டக் காவல் துறை அதிகாரி கூறியதாவது:
இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் குறித்து புனியாவின் வீட்டின் அருகே வசிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புனியா தனது மகனையும், மனைவியையும் கொலை செய்திருந்தால், அப்போது, மனைவியும், மகளும் எழுப்பிய சப்தம் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு கேட்டிருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக பக்கத்து வீட்டினரிடம் விசாரித்த போது அதுபோன்று சப்தம் ஏதும் தங்களுக்கு கேட்கவில்லை எனக் கூறுகின்றனர்.
அதேபோன்று, சம்பவத்தன்று இரவு தனது பெற்றோர், தம்பியுடன் உணவருந்திவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக புனியாவின் மூத்த மகன் நிதின் கூறியுள்ளார். மேலும், தந்தை கடந்த ஏழு ஆண்டுகளாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், இந்தச் சம்பவத்தில் நான்காவது நபரின் தொடர்பு ஏதும் உள்ளதாக என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.