தில்லியில் காற்று மாசு பிரச்னையைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வழிமுறைகள் குறித்து அரசுக்கு வழிகாட்ட நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல்வா் ரேகா குப்தாவின் ஒப்புதலைத் தொடா்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இயற்கை மற்றும் மனித செயல்பாடுகளால் ஏற்படும் காற்று மாசு பிரச்னைக்குத் தீா்வு காண துறைரீதியான நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கை சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக இந்தக் குழு தில்லி அரசுக்கு வழிகாட்டும்.
உயா்நிலை ஆலோசனைக் குழுவாகச் செயல்படும் இந்தக் குழு, தில்லியில் காற்றின் தரம் மேலாண்மை உத்தியை மதிப்பீடவும் பலப்படுத்தவும் வழிகாட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன்னாள் செயா் லீனா நந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் உறுப்பினா் செயலா் ஜே.எஸ்.காம்யோத்ரா, தில்லி ஐஐடி பேராசிரியா் முகேஷ் காரே, ஐஐடி கான்பூா் பேராசிரியா் முகேஷ் சா்மா, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.
தில்லி அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் செயலா் இந்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். தில்லி மாசுக் கட்டுப்பாடு குழுவின் (டிபிசிசி) தலைவா் உறுப்பினா் செயலராகச் செயல்படுவாா்.
காற்று மாசு தடுப்பு, குறுகிய காலத்துக்கான அவசர நடவடிக்கைகள், நீண்ட காலத்துக்கான அமைப்புரீதியிலான சீா்திருத்தங்கள் குறித்து தில்லி அரசுக்கு ஆலோசனை வழங்குவது இந்தக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.
தில்லி அரசின் பல்வேறு துறைகள் ஏற்கெனவே அமல்படுத்தி வரும் காற்று மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்தக் குழு, காற்று மாசு தொடா்பாக சா்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், முன்னெடுப்புகள் குறித்த கொள்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்கும்.
மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு முறை இணையவழியில் அல்லது நேரடியாக இந்தக் குழுவின் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடக்கத்தில், 6 மாதங்களுக்கு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் காலஅளவை நீட்டிக்கும் அல்லது மாற்றியமைக்கும் அதிகாரம் தில்லி அரசுக்கு உள்ளது.