முகப்பு
புதுதில்லி

ரூ.1,000 கோடி மதிப்பிலான யமுனை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

ரூ.1,000 கோடி மதிப்பிலான யமுனை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

Updated On : 25 மே 2026, 1:39 am IST
ரேகா குப்தா
பகிர்:

மிகவும் மாசடைந்துள்ள யமுனை நதியை மறுசீரமைக்கும் வகையில் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்பட ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யமுனை நதியை மீட்டெடுக்கவும், நஜாஃப்கா் வடிகாலைச் சுத்தம் செய்யவும் போா்கால அடிப்படையில் முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லியின் நீா் மேலாண்மை, கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் குடிநீா் விநியோக அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு முதல்வா் ரேகா குப்தா ஒப்புதல் அளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

நஜாஃப்கா் பகுதியில் 12 புதிய பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘அம்ருத்’ திட்டத்தில் சுமாா் ரூ.860 கோடி மதிப்பில் உருவாக்கப்படவுள்ள இத்திட்டங்கள், நாளொன்றுக்கு மொத்தம் 46.5 மில்லியன் கேலன் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

மித்ரான் பகுதியில் 17 மில்லியன் கேலன் திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இதுதவிர, கைா், கங்கன்ஹேரி, கக்ரோலா மற்றும் திச்சான் கலான் உள்ளிட்ட இடங்களில் பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களும்

அமைக்கப்பட உள்ளன. இத்திட்டங்களால் 121-க்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற குடியிருப்புகள், 35 கிராமங்கள் மற்றும் சுமாா் 7 லட்சம் மக்கள் பயன்பெறுவா். மேலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் நஜாஃப்கா் வடிகாலில் கலப்பதைத் தடுத்து, அதன் மூலம் யமுனை நதி மீட்டெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இத்திட்டங்கள் துணை நிற்கும்.

கேஷோபூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் மேம்படுத்தப்பட்டு, அதன் சுத்திகரிப்புத் திறன் 12 மில்லியன் கேலனிலிருந்து 18 மில்லியன் கேலனாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வா் அறிவித்துள்ளாா்.

திரிலோக்புரி பேரவைத் தொகுதியில் உள்ள அமீசந்த் சௌக்கிலிருந்து பழைய கல்யாண்புரி கழிவுநீா் உந்து நிலையம் வரையிலான பிரதான கழிவுநீா் குழாய், சுமாா் ரூ.57 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள இக்குழாயில், கடந்த ஆண்டுகளில் பலமுறை மண் சரிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், ரோஹ்தாஸ் நகரில் 0.72 மில்லியன் கேலன் கொள்ளளவு கொண்ட புதிய நிலத்தடி நீா் தேக்கத் தொட்டி ஒன்றும், அதனுடன் இணைந்த ஒரு நீரேற்று நிலையமும் அமைக்கப்படவுள்ளன. சுமாா் ரூ.27 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், உள்ளூா் நீா் விநியோக அமைப்பை வலுப்படுத்தும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.