கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை, வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஒட்டி, விழிப்புணர்வுப் பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியர் மேலும் பேசியது:
குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்காக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் பேருந்துகளில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், 14 வயதிற்குள்பட்ட குழந்தைகளை பணி அமர்த்தினாலும், 15-18 வயதிற்குள்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தினாலும் 2 ஆண்டு வரை சிறைதண்டனை அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தொழில்களில் ஈடுபடுத்தப்படுவது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தால், அது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
பின்னர், வடசேரி பேருந்து நிலையத்திலுள்ள உணவகங்களுக்குச் சென்று, குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா? என பார்வையிட்ட அவர், மக்களிடமும், உணவக உரிமையாளர்களிடமும் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பி.எம்.சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா, போக்குவரத்துத் துறை (ராணித்தோட்டம்) துணை மேலாளர் டி.கோபாலகிருஷ்ணன், தொழிலாளர் ஆய்வாளர் க.ஞானசம்பந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.