கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் ஆதிச்சன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (34). தொழிலாளி. இவரது மனைவி நளினா சாம்லெட் (32). இரு மகன்கள் உள்ளனர். இத்தம்பதி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவும் கணவர்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதில், மனைவியை அரிவாள் மற்றும் கட்டையால் விஜயகுமார் தாக்கினாராம். நளினா சாம்லெட் டின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனராம். உடனே, விஜயகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம். இதனிடையே பலத்த காயமடைந்த நளினா சாம்லெட் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவலின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸார் வந்து அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள தோப்பில் பதுங்கி இருந்த விஜயகுமாரை கைது செய்தனர்.
விசாரணையில், "வெளிநாட்டில் வேலை செய்தபோது போதிய வருமானம் இருந்த நிலையில், தற்போதைய வேலையில் வருமானம் குறைந்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும், தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது; இதுகுறித்து கேட்டபோது, தன்னை உதாசீனப்படுத்தியதால் அவரை தாக்கியதில் உயிரிழந்துவிட்டார்' என விஜயகுமார் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.