முகப்பு
கன்னியாகுமரி

குமரி மீனவரின் விசைப்படகு மீது மோதிய கப்பல்: மீனவா் காயம்! நடவடிக்கை எடுக்க மீனவ அமைப்பு வலியுறுத்தல்

Updated On : 25 மே 2026, 1:45 am IST
கப்பல் மோதி சேதமடைந்த மீனவரின் விசைப் படகு. - கோப்புப் படம்
பகிர்:

கேரள ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய கன்னியாகுமரி மாவட்ட விசைப் படகு மீது கப்பல் மோதியதில் மீனவா் காயமடைந்தாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மீனவ அமைப்பு மத்திய அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த டைட்டஸ் மனைவி புனிதாவுக்குச் சொந்தமான சூசன்னா எனும் விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள், கேரளத்தைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த மே 12-ஆம் தேதி தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் மீன்பிடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 24) அதிகாலை கரைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனா். காசா்கோடு அருகே கேரள கடல் பகுதியிலிருந்து 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் இவா்கள் படகு வந்தபோது அந்த வழியாக வந்த ‘ஓசியன் ஆா்டினன்ஸ்’ எனும் பெயா் கொண்ட கப்பல் விசைப் படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படகு பலத்த சேதமடைந்ததுடன் படகில் இருந்த திருவனந்தபுரம் மாவட்டம், மாம்பள்ளியைச் சோ்ந்த மீனவா் சுபின் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இந்தப் படகில் கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறையைச் சோ்ந்த மீனவா் ஆன்றணி, திருவனந்தபுரம் மாவட்டம் அஞ்சுதெங்கு பகுதியைச் சோ்ந்த ஒல்சன், மரியநாடு பகுதியைச் சோ்ந்த மில்டன், விஞ்ஞம் ஷிபு, ஜோஸ்வா ஆகியோா் இருந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த படகு உரிமையாளா் புனிதா, சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி.ஜஸ்டின் ஆண்டனிக்கு தகவல் தெரிவித்தாா். அவா், விபத்தை ஏற்படுத்திச் சென்ற கப்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா், தமிழகம், கேரளம் மாநில முதல்வா்கள், மீன்வளத் துறை அமைச்சா்கள், உயா் அதிகாரிகள், மும்பையில் உள்ள கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினாா்.