தமிழகத்தில் உள்ள 9 அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பு 2017-18ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணியை கல்லூரி முதல்வர் எஸ்.எம். பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். அனைத்து வேலைநாள்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். திருநெல்வேலி கல்லூரிக்கு முதல்கட்டமாக 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் விண்ணப்பங்கள் பெற்று மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து ஜூலை 17ஆம் தேதி மாலைக்குள் சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திலோ, அந்தந்த கல்லூரி முதல்வர்களிடமோ, புதிய கல்லூரிகளுக்கு தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ வழங்கலாம். 3 ஆண்டு படிப்பில் சென்னையில் 321, மதுரை 181, திருச்சி, கோவை, திருநெல்வேலி தலா 200, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் கல்லூரிகளுக்கு தலா 80 என மொத்தம் 1,502 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விண்ணப்பம் விநியோகம் வழங்கும் பணியில், பேராசிரியர் கிறிஸ்துஜோதி, முனைவர்கள் ராமபிரான் ரஞ்சித்சிங், சண்முகப்பிரியா, ஜீவரத்தினம், லட்சுமி விஸ்வநாத் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.