திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் வங்கி சார்பில், கண் தான விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து தொடங்கிய இந்த பேரணியில் பயிற்சி மருத்துவர்கள், மாணவர், மாணவிகள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இப் பேரணியானது பெரியார் நகர் வரை சென்று, மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவு வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. தொடர்ந்து, கண் தான இருவார விழா, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கண் தானம் வழங்கிய வாரிசுதாரர்களுக்கு விருதுகளை வழங்கி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிகழாண்டு 26 பேர் கண் தானம் அளித்துள்ளனர். இதன் மூலம், 50 பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது. கண் தானம் செய்யும் வழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில், அகில இந்திய அளவில் கண் தானம் தேவைப்படுவோரில் 30 சதவீதம் பேர் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது. பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் 70 சதவீதம் பேருக்கு கண் தானம் கிடைப்பதில்லை.
எனவே, இறந்த பிறகு கண் தானம் செய்வதை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒருவர் அளிக்கும் கண்களால் குறைந்தது 4 பேருக்கு தானம் அளித்து பார்வை கிடைக்க இயலும். இதற்கு குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் ரேவதி, உறைவிட மருத்துவ அலுவலர் நீலதாட்சியினி, கண் மருத்துவத் துறைத் தலைவர் ராமலட்சுமி, கண் வங்கி மருத்துவர் சிவதாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், கண் தானம் வழங்கிய 26 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் கண் தான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுக் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.