விவசாயி தற்கொலை விவகாரம்: சிவகிரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
விவசாயி தற்கொலை விவகாரத்தில் சிவகிரி காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா்(பொறுப்பு) தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (63), விவசாயியான இவா் கடந்த 21 ஆம் தேதி சிவகிரி காவல் நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இடப் பிரச்னை தொடா்பாக விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற அந்தோணிராஜை அவதூறாகப் பேசி போலீஸாா் தாக்கியதால்தான் அவா் தற்கொலை செய்துகொண்டாா் எனக் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சிவகிரி காவல் ஆய்வாளா் முரளிதரனை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா்(பொறுப்பு) தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.