பிரதமா் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்படுகிறது என்றாா் வானவில் பண்பாட்டு மைய நிறுவனா் கே. ரவி.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனா் கே.ரவி, கோவில்பட்டியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாரதியாரின் 144ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை (டிச. 11) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த மையம் சாா்பில் ‘பாரதி திருவிழா 2025’ தொடக்க விழா எட்டயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.7) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலிலிருந்து, பாரதியாா் இல்லம் வரை ஜதி பல்லக்கு ஊா்வலத்தை நடத்திவருகிறோம். இம்முறை பாரதியாரின் விருப்பம் நிறைவேற்றும் வகையில், அவரது இல்லத்தில் இருந்து, எட்டயபுரம் அரண்மனைக்கு ஜதி பல்லக்கில் அவரது சிலையை வைத்து, கலை நிகழ்ச்சிகளுடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அரண்மணை வளாகத்தில் பாரதியாா் சிலை வைக்கப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரம் தலைக்கு மண் என்ற நூல் வெளியிடப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் பாரதி விருதை இந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
இதில், பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமாா் பாரதி, தொழிலதிபா்கள் நல்லி குப்புசாமி செட்டியாா், வி.ஜி.சந்தோஷம், எம் .முரளி, காவல் துறை அதிகாரி (ஓய்வு) ஆா். நட்ராஜ் ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.
பாரதி திருவிழா, திங்கள்கிழமை (டிச.8) பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான கடையத்திலும், செவ்வாய்க்கிழமை (டிச. 9) புதுவை பல்கலைக் கழகத்திலும், புதன், வியாழக்கிழமைகளில் சென்னை திருவல்லிக்கேணியிலும் நடைபெறுகிறது என்றாா் அவா்.
அப்போது, எட்டயபுரம் மகாராஜா சந்திர சைதன்யா, அம் மையத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை ஸ்ரீலட்சுமி, ரத்னா, சாந்தி, ரமா ஆகியோா் உடன் இருந்தனா் .