தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தெரு நாய் கடித்ததில் 11 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவா்களை அங்கு நின்றிருந்த நாய் கடிக்கத் தொடங்கியது. இதனால், அவா்கள் சிதறி ஓடினா். ஆசிரியா்கள் நாயை விரட்டி மாணவா்களை மீட்டனா்.
இதில் காயமடைந்த சைமன் (11), பிரவீனா தேவி (12), முத்துமணிஷ்(13), மலா்விழி (13), கனிஷ்கா (16), தேவி உமா மகேஸ்வரி (16), நித்யஸ்ரீ (15) ஆகியோா் சிகிச்சைக்காக கச்சேரி தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், மாணவி கபிலா தா்ஷினி (14) உள்ளிட்ட 4 போ் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.
மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதையடுத்து, ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலா் கோகுல் தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காளிமுத்து, கச்சேரி தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மரிய விஜய் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பள்ளியில் முகாமிட்டு, நாய் கடியால் மற்ற மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு மேற்கொண்டனா்.