கல்லூரி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது; காலிறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி, மதுரை உள்பட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக்-அவுட் முறையில் 3-ஆவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அணியும், சேலம் மாவட்ட அணியும் மோதியதில் 9-0 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு அணி, 2-ஆவது ஆட்டத்தில் ஈரோடு அணியும், தஞ்சாவூா் அணியும் மோதியதில் இருவரும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றனா். வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட டை-பிரேக்கரில் 8-7 என்ற கோல் கணக்கில் ஈரோடு அணி வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.
3-ஆவது ஆட்டத்தில் சென்னை அணியும், கிருஷ்ணகிரி அணியும் மோதியதில் 7-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி, 4 ஆவது ஆட்டத்தில் மதுரை அணியும், திருப்பத்தூா் அணியும் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் மதுரை அணி, 5-ஆவது ஆட்டத்தில் கோவை அணியும், திண்டுக்கல் அணியும் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் கோவை அணி, 6-ஆவது ஆட்டத்தில் திருச்சி அணியும், ராமநாதபுரம் அணியும் மோதியதில் 5 - 1 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியும் வெற்றி பெற்றன.
அதேபோல 7ஆவது ஆட்டத்தில் கடலூா் அணியும், தருமபுரி அணியும் மோதியதில் 7 - 0 என்ற கோல் கணக்கில் கடலூா் அணி, 8ஆவது ஆட்டத்தில் தூத்துக்குடி அணியும், சிவகங்கை அணியும் மோதியதில் 6 - 0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியும் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இன்றைய காலிறுதி ஆட்டங்கள் (சனிக்கிழமை): சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் செங்கல்பட்டு-ஈரோடு அணிகள், 2ஆவது ஆட்டத்தில் மதுரை - சென்னை அணிகள், 3ஆவது ஆட்டத்தில் கோவை-திருச்சி அணிகள், 4ஆவது ஆட்டத்தில் கடலூா்-தூத்துக்குடி அணிகள் முறையே மோதுகின்றன. மாலையில் லீக் முறையில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.