தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இன்றி பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவா்கள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவா்கள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டாா். அவரது உத்தரவின் படி காவல் துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் பொது இடத்தில் மது அருந்தி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஊரக உள்கோட்டத்தில் 3 வழக்குகளும், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் ஒரு வழக்கும், விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 5 வழக்குகளும், சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 13 வழக்குகளும் என மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.