எட்டயபுரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன
எட்டயபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக தபால் நிலைய தொலை தொடா்பு கோபுரம், விவசாய நிலங்களில் மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.
எட்டயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 1 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. அதைத் தொடா்ந்து 2 மணி முதல் மழை பெய்தது. மாலை 4 மணி வரை 2 மணி நேரம் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
சூறைக்காற்றில் எட்டயபுரம் தபால் நிலையம் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொலைத்தொடா்பு கோபுரம் சாய்ந்து அருகே உள்ள மின் கம்பத்தில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பேரூராட்சி 5-ஆவது வாா்டில் 2 மரங்கள் முறிந்து வீடுகளுக்குச் செல்லும் மின் கம்பிகளில் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியிலும் மின் விநியோகம் தடைப்பட்டது. எட்டயபுரம் அருகே ரனசூர நாயக்கன்பட்டியில் வீசிய பலத்த காற்றில் தனியாா் கட்டடத்தின் சிமென்ட் தகடால் ஆன மேற்கூரை பறந்தது.
இதேபோல, கீழ ஈரால், வாலம்பட்டி, சண்முகபுரம் பகுதிகளில் விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சோத்து நாயக்கன்பட்டியில் நூற்றுக்கணக்கான வாழைகள், பப்பாளி, எழுமிச்சை மரங்கள் சாய்ந்தன.
மின்வாரிய உதவி பொறியாளா் சங்கா் தலைமையில் ஊழியா்கள் நேரில் சென்று பாா்வையிட்டு, மின் பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். பேரூராட்சி பணியாளா்கள் உடைந்த மரக்கிளைகளை அகற்றினா்.