திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 248 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை கூடிய போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக, தனியார் தொலைக்காட்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் அளித்த வாக்கு மூலம் விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் தனபால் நிராகரித்தார்.
இதையடுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்தை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் முன் திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் திருமானூரில் 25 பேர், கீழப்பழுவூரில் 15 பேர், உடையார்பாளையத்தில் 15 பேர், ஜயங்கொண்டத்தில் 30 பேர், தா.பழூரில் 35 பேர் என மாவட்டத்தில் 190 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பெரம்பலூரில்......
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் திமுக நகரச் செயலர் எம். பிரபாகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜ்குமார் உள்பட 58 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.