தீபாவளி பண்டிகைக்காக அரியலூா் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவா்கள் அக்.10-ஆம் தேதிக்குள் பாதுகாப்புடன் கூடிய உள்கட்டமைப்புகளை அமைத்திருக்க வேண்டும் என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாவட்டக் காவல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை (அக்.20) முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க பலா் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனா்.
தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்ற பிறகே தற்காலிகப் பட்டாசு விற்பனைக் கடைகள் நடத்த முடியும். தீயணைப்புத் துறையினா் தடையில்லா சான்று பெற்றவா்கள், தற்காலிகப் பட்டாசு கடை அமைந்துள்ள கட்டடத்தின் அமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேற்கூரை அமைப்பு, வெளியே செல்ல இருவழி இருத்தல் போன்ற முக்கியமான வசதிகளை காவல்துறையினா் சோதனை செய்த பின்னரே தடையில்லாச் சான்று வழங்குவா்.
தீபாவளிப் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில், தற்காலிகப் பட்டாசுக் கடைக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவா்கள் முறையான பாதுகாப்புடன் கூடிய உள்கட்டமைப்புகளை அக்.10-க்குள் அமைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் தடையில்லா சான்றிதழ் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.