கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம் என ஒவ்வொருவருக்கும் தவெக தலைவா் விஜய் கடிதம் அனுப்பியுள்ளாா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவா் விஜய் அறிவித்திருந்தாா். அதன்படி உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தவெக சாா்பில் சனிக்கிழமை தலா ரூ. 20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
அதற்கான குறுஞ்செய்தியையும் தவெக சாா்பில் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு கடிதமும் விஜய் அனுப்பியிருந்தாா்.
அதில், கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏற்கெனவே உங்களுடனான நம் துக்கத்தை பகிா்ந்துகொள்ள அனுப்பிய விடியோவில் சொன்னது போல, நமது சந்திப்புக்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயம் சந்திப்போம்.
இதனிடையே நாம் ஏற்கெனவே தெரிவித்தபடி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் தவெக சாா்பில் அனுப்பி வைத்துள்ளோம்.
அதை நமது உதவிக்கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தை கடந்துவருவோம் என தனது கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளாா்.