மனிதநேயத்தை வளர்ப்பதே மெய்யான கல்வி என்றார் த.மு.எ.க.ச. மாநில துணைத்தலைவர், கவிஞர் நா. முத்துநிலவன்.
புதுகை பிள்ளைதண்ணீர்பந்தல் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற துளிர் இல்லக் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:
கல்வி,மதிப்பெண் என்ற இலக்கை அடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருத்தல் கூடாது. மாறாக, மனிதநேயத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும். படித்தவர்களிடம் இந்த சமூகம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது.
மக்களை நேசிப்பவர்களாகவும், சமூகத்துக்கு உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், கல்வி பல்வேறு திறமைகளை வளர்ப்பதாக அமைய வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் பாடங்களைத் தாண்டி பல்வேறு ஆளுமை, திறன் கொண்டவர்களாக தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய யுக்திகளை கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் நீட் போன்ற தேர்வு முறைகள் சாதாரண ஏழை,எளிய மக்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது என்றார்.
துளிர் இல்ல கிளை தலைவர் க. உஷா நந்தினி தலைமை வகித்தார்.
துளிர் இல்ல செயலாளர் கைலாஷ் வரவேற்றார். கிளை பொறுப்பாளர்கள் முத்துலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசை ஆசிரியர் பானுமதி பாடல்கள் பாடினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், கவிஞர் புதுகை புதல்வன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
துளிர் இல்லத் தலைவர் ஆண்ட்ரு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.