தஞ்சாவூர் ரயிலடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2003-க்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன் ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்களைக் களைய வேண்டும்.
ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு 20 சதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசு அலுவலர்களின் அகவிலைப்படி 50 சதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
தமிழக அரசில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு அலுவலர்களுக்கு என தனியே நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் க. ராஜராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் த. கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர்கள் ஒன்றிய மாநிலத் தலைவர் எஸ்.ஏ. மாதப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.