குடந்தை பொன்னி இலக்கியச் சுற்றத்தின் சார்பில், கவிஞர் மருதம் கோமகனின் நூல்கள் வெளியீட்டு விழா பழைய பாலக்கரை நீலத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ள புனிதபீட்டர்ஸ் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு பொன்னி இலக்கியச் சுற்றத்தின் தலைவர் பேராசிரியர் பிலோமின்ராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் மணி வரவேற்றார். எழுத்தாளர் எம்.எஸ். பாலு, கவிஞரை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ் இலக்கியத் துறைத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்னாள் சிறப்பு நிலைப் பேராசிரியருமான முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார்.
விழாவில், முன்னதாக பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியம் நூல்களை வெளியிட, குடந்தை அரசு ஆடவர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் துரையரசன் நூல்களை பெற்றுக் கொண்டார். விழாவில் கவிஞர் மருதம்கோமகனுக்கு பொன்னி இலக்கியச்சுற்றத்தின் சார்பில் பாவலர் சிகரம் என்ற பட்டத்தினையும், கேடயத்தினையும் கு.வெ.பாலசுப்பிரமணியம் வழங்கினார். கவிஞர் தேவரசிகன், கவிஞர் வியாகுலன், எழுத்தாளர் அபூர்வன் ஆகியோர் நூல்களுக்கு மதிப்புரை வழங்கினர். கவிஞர் காழிநாடன் வாழ்த்துக்கவிதை வாசித்தார். கவிஞர் மருதம் கோமகன் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முகம்மது உசேன், விஜயகுமார், வீரப்பன், செருகுடி செந்தில்குமார் மற்றும் பாவலர் பூவையார், கவிஞர் அயூப்கான், கவிஞர் கல்லூர் மா.செல்வக்குமார் முதலான தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். பொன்னி இலக்கியச் சுற்றத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் செ.கணேசமூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.