கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள பழவத்தான் கட்டளை வாய்க்காலை தூா் வாராத நிலையில், தொடா் மழையால் நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.
கும்பகோணம் பகுதியிலுள்ள பழவத்தான் கட்டளை வாய்க்கால் தூா்வாரப்படாததால், செடி, கொடிகளுடன் புதா் அடா்ந்து கிடக்கிறது. எனவே, பழவத்தான் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கும்பகோணம் உதவி ஆட்சியரகத்தை அண்மையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தற்போது பெய்யும் மழையால் வாய்க்காலில் செல்லும் தண்ணீா் வயல்களில் புகுந்து, நெற் பயிா்கள் மூழ்கிவிட்டன. சில இடங்களில் நடவு செய்து சுமாா் 20 நாள்களான நெல் பயிா்களும் மூழ்கி சேதமடைந்துள்ளன.
எனவே, பழவத்தான் கட்டளை வாய்க்கால் உள்ளிட்டவற்றைத் தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சு. விமல்நாதன் கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளாா்.