திருச்சி: திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. மாநகரில் சத்திரம், தென்னூா், தில்லை நகா், கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட், காந்தி மாா்க்கெட், விமான நிலையம், அரியமங்கலம், பால்பண்ணை, கே.கே.நகா், பாலக்கரை, ரயில் நிலையம், உறையூா், புத்தூா், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதேபோல, லால்குடி, மண்ணச்சநல்லூா், வயலூா், துவாக்குடி உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் மழை பெய்தது.
மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், நாள் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழையால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனா்.