தினம் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் முதல்வர்
அனைத்துத் தரப்பினரும் நலம் பெறவும் தினம் ஒரு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சர் அ.முகமதுஜான் கூறினார்.
அனைத்துத் தரப்பினரும் நலம் பெறவும் தினம் ஒரு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சர் அ.முகமதுஜான் கூறினார்.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ், ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட சீனிவாசன்பேட்டையில் ரூ.1.50 கோடியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியும், 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியும் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் அ.முகமதுஜான் பேசியதாவது:
Advertisement
Advertisement
திட்டங்களுக்காக மக்கள் அல்ல; மக்களுக்காகத் திட்டங்கள் எனும் உயரிய சிந்தனையில், அனைத்துத் தரப்பினரும் நலம் பெறவும் தினம் ஒரு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
தமிழக அரசின் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை நகரில் 30 வார்டுகளிலும் 30 ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பாலாற்றில் 2 உறை கிணறுகள் அமைக்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றார்.
இதைத் தொடர்ந்து, குடிநீர்த் தொட்டி கட்டுவதற்காக 3,500 சதுர அடி இடத்தை இலவசமாக வழங்கிய பிரகாஷை அமைச்சர் முகமதுஜான் பாராட்டினார்.
இதையடுத்து, ரூ.3 கோடியில் கட்டப்படும் நகராட்சி கட்டடத்தின் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
விழாவில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் சுமைதாங்கி சி. ஏழுமலை, நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம், துணைத் தலைவர் ஜே.பி.சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.பி.சந்தோஷம், ஆர்.ஷாபுதீன், பணி ஆய்வாளர் தமிழரசன், நகராட்சி இளநிலை பொறியாளர் தாமோதரன், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் விஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.