கோயில் அருகே வேகத் தடை அமைக்கக் கோரி, விருத்தாசலத்தில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விருத்தாசலம் மணவாளநல்லூரில், கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோயில் அமைந்துள்ள சாலையானது தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் எனக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், வேகத் தடை அமைக்க வாய்ப்பில்லை என நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாகத் தெரிகிறது. இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், புதன்கிழமை கோயில் எதிரே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறித்து வந்த விருத்தாசலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.