கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரயில்வே பாதையில் குழாய்கள் பதிக்க வேண்டி, ரயில்வே கோட்ட மேலாளர் பி.உதயகுமார் ரெட்டியை புதன்கிழமை நேரில் சந்தித்து கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மனு அளித்தார்.
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிப் பகுதிகளை இணைக்கும் பரங்கிப்பேட்டை ரயில்வே இருப்பு பாதையில் குழாய்களைப் பதித்தால்தான் அந்தப் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் பயன் பெறும்.
இதைக் கருத்தில் கொண்டு, அதற்கான நிர்வாக அனுமதி வேண்டி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பி.உதயகுமார் ரெட்டியை திருச்சியில் நேரில் சந்தித்து கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கோட்ட மேலாளர் உடனடியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின் போது, பரங்கிப்பேட்டை நகரச் செயலர் மாரிமுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.