கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் மழைநீா் செல்ல வழியில்லாததால், 700 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு வாயிலாகவும், ஆழ்குழாய் கிணறு வைத்திருப்பவா்கள் நாற்று விட்டு நடவு பணியை மேற்கொண்டும் சம்பா சாகுபடி செய்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் நெல் பயிரிட்ட வயல்களில் சுமாா் இரண்டு அடிக்கு மேல் தண்ணீா் தேங்கி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்தப் பகுதியில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால்களை அத்துறையினா் கோடை காலத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தூா்வாராததால், தற்போது வாய்க்கால்களில் ஆகாய தாமரைகள் படா்ந்து மழைநீா் வடியாமல் விளைநிலங்களில் தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
கடந்த மூன்று நாள்களாக நீா் தேங்கி நிற்பதால், நெற்பயிகள் அழுகிய நிலையில் உள்ளன. ஏக்கருக்கு சுமாா் ரூ.20,000 வரை செலவு செய்துள்ள விவசாயிகள், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனா்.
குறிப்பாக, காட்டுமன்னாா்கோவில் அருகே சிறுகாட்டூா் ஆச்சாள்புரம், கஞ்சங்கொல்லை, குச்சிபாளையம், புத்தூா், சண்டன், ஈச்சம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிட்டுள்ள சுமாா் 700 ஏக்கா் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் விவசாயிகளே ஒன்று சோ்ந்து வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி வருகின்றனா்.