சிதம்பரம்: கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கோதண்டவளாகம் கிராமத்தில் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து மழைநீா் தேங்கியுள்ள சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் தெற்குத்தெருவில் சுமாா் 2 கிலோமீட்டா் தூரத்திற்கு சாலை பழுதடைந்து மழைநீா் தேங்கி சேரும், சகதியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் குடிநீரோடு கழிவுநீா் கலந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இது குறித்து கிராம மக்கள் பலமுறை ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அன்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என்பதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஒன்று திரண்டு கொட்டும் மழையில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி சாலையிலேயே நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்யப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.