முகப்பு
கடலூர்

ரயிலில் கஞ்சா கடத்தல்: சிறுவன் உள்ளிட்ட 4 போ் கைது

Updated On : 25 மே 2026, 1:02 am IST
பாலமுருகன்
பகிர்:

ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் விருத்தாசலத்துக்கு கஞ்சா கடத்தி வந்ததாக சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை, கடத்தலைத் தடுக்க, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், வெளி மாநிலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையம் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து சந்தேகப்படும்படும்படியாக ரயிலில் இருந்து இறங்கி வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், எசனூா் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (33), கருவேப்பிலங்குறிச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த சிவசக்திவேல் (21) என்பதும், இவா்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களை அழைத்துச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்திருந்த ஸ்ரீமுஷ்ணம் வட்டம், சக்கரமங்கலம் பகுதியைச் சோ்ந்த வீரமுத்து (23) மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு போ் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இதுதொடா்பாக ஒரு பைக் பறிமுதல் செய்தனா்.

வீரமுத்து
சிவசக்திவேல்