புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியை திறக்க வலியுறுத்தி, மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் உள்ள மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.13 கோடி செலவில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன.
திறப்பு விழா கண்டும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வராத மீன் அங்காடியை திறக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தை மீனவப் பெண்களுடன் சென்று முற்றுகையிட்டனர்.
அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் விஸ்வநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அங்கு போலீஸார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு போடப்பட்ட தடுப்புகளையும் மீறியும் போராட்டக்காரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.