அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட இடங்களில் விளம்பரம் செய்பவர்கள், அரசு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விளம்பரப் பதாகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், விளம்பரதாரர்கள் அந்த இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைத்தும், சுவரொட்டிகளை ஒட்டியும் வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.
இதுபோன்ற அனுமதியற்ற பதாகைகள் அன்றாட நிகழ்வுகளுக்கு இடையூறாக இருப்பதோடு, பொலிவுறு நகரமாகவும் புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டதால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சலுகைகளைப் பெறத் தடையாகவும் உள்ளது.
எனவே, அரசு அனுமதித்துள்ள இடங்களில் மட்டும் விளம்பரதாரர்கள் முறையாக கட்டணம் செலுத்தி, அரசு ஆணை பெற்று விளம்பரங்கள் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தவறும்பட்சத்தில், அந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்படும். சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.