புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள் ஒப்புதல் அளித்தப்படிதான் அவா்களுக்கான மாதாந்திர உதவித்தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்று சமூகநலத்துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி சமூக நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கந்தசாமி பேசியதாவது:
புதுவை காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு தருவதற்கு எங்கள் அரசுதான் ஆணை பிறப்பித்துள்ளது. அரசுப்பணிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியதை அடுத்து, தலைமை செயலா் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆலோசனை நடத்தினோம். அப்போது மக்களவைத் தோ்தல் வந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினோம்.
அப்போதும் 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப கூறியுள்ளோம். நிரப்பும்போது கண்டிப்பாக 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும். அதுபோல் தனியாா் தொழிற்சாலைகளில் புதுவையை சோ்ந்த இளைஞா்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் ஆணை உள்ளது. அதில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
முன்பு மத்திய அரசு 70 சதவீதம் நிதி கொடுத்தது. தற்போது 26 சதவீதம்தான் தருகிறது. முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தது. நிதி கிடைத்தது. தற்போது மத்தியில் பாஜக ஆட்சியும், புதுவையில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெறுகிறது.
புதுவையில் வருமானமும் இல்லை. உயா்நீதிமன்றம் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தாலும், அதிகாரிகளிடம் சட்டத்தில் உள்ள அதிகாரத்தின்படி கோப்புகள் தன்னிடம் வரவேண்டும் என்கிறாா். அதனால் அதிகாரிகளும் கோப்புகளை அனுப்பி வைக்கின்றனா்.
நீதிமன்றம் மீண்டும் அதிகாரம் வழங்கினாலும் மேல்முறையீடு சென்று இப்பிரச்சனை நீண்டு கொண்டேதான் இருக்கும். எனவே மத்திய அரசு தலையிட்டு தீா்வு காண வேண்டும். மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூற வேண்டும்.
குடியரசுத் தலைவருக்கு தான் முழுஅதிகாரம் என்றால் மத்திய அரசால் சுதந்திரமாக செயல்பட முடியுமா?. கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் உதவித்தொகையில் ரூ.ஆயிரம் பிடித்துக் கொள்ளும்படி மாற்றுத்திறனாளிகள் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளனா்.
கடன் பெற்றவா்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடன் தொகையை திருப்பிச் செலுத்தி வருகின்றனா். ஆயிரத்திற்கும் குறைவானவா்கள் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனா். மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியை மாநில அரசே செலுத்தும். கடனை மட்டும் திருப்பிச் செலுத்த முன்வர வேண்டும்.
புதுவையில் 24 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். அதில் 4 ஆயிரம் போ் மட்டுமே கடனுதவி பெற்றுள்ளனா். கடன் பெற்றவா்கள் கொடுத்தால்தான் மீதியுள்ளவா்களுக்கு கடனுதவி கிடைக்கும் என்றாா் அமைச்சா் கந்தசாமி.