விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் இறந்த விவசாயி சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் அருகே உள்ள ஈயனூரைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (67). விவசாயி. இவரது மனைவி பட்டத்தாள் (54), மகன் வெங்கடேசன் (35). ஓட்டுநர்.
ஆண்டியப்பனும், வெங்கடேசனும் ஜூன் 11-ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது, சேலம் பிரதான சாலையில் ஈயனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது, மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், ஆண்டியப்பன் இறந்தார்.
இதுதொடர்பாக, வரஞ்சரம் போலீஸார் விபத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆண்டியப்பன் சாவில் மர்மம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆண்டியப்பன் உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஈயனூர் சாலையில் புதன்கிழமை திரண்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ஆண்டியப்பன் மனைவி பட்டத்தாள், புகார் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. எங்கள் பகுதியைச் சேர்ந்த மணிமேகலை-குமாரசாமி குடும்பத்தினர், பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய போது, எனது கணவர், மகன் தட்டிக்கேட்டு போலீஸில் புகார் அளித்தனர். அதனால், ஏற்பட்ட முன்விரோதத்தில் எனது கணவரை வாகனம் ஏற்றி கொலை செய்துள்ளனர். இதற்குக் காரணமான அதிமுக பிரமுகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக, வரஞ்சரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.