விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூரில் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அப் பகுதி மக்கள் கடைக்குள் இருந்த மதுப் புட்டிகளை எடுத்து வந்து தரையில் போட்டு உடைத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் எம்.குன்னத்தூரில், ஊரின் மத்தியில் டாஸ்மாக் மதுக் கடை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இந்த மதுக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடமாற்றம் செய்யக் கோரி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்த நிலையில், கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மதுப் புட்டிகளை வெளியே கொண்டுவந்து போட்டுடைத்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ராஜேந்திரன், டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு மாத காலத்துக்குள் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.