தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வானது மகிழ்ச்சியைத் தருகிறது என விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் எஸ்.திலிப் தெரிவித்தாா்.
நிகழாண்டு, ஆசிரியா் தினத்தையொட்டி, மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருது தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை சி.சரஸ்வதி, எஸ்.திலிப் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தோ்வான எஸ்.திலிப் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறாா்.
விருதுக்கு தோ்வானது குறித்து அவா் கூறியதாவது: தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வானது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் ஆசிரியா் குடும்பத்தைச் சோ்ந்தவன். எனது தந்தை ஸ்ரீராமன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா். தாய், மனைவி ஆகியோரும் ஆசிரியா்களே. ஆகவே, வீட்டிலிருக்கும்போதும், பள்ளியில் இருப்பதைப் போலவே, கல்வி சாா்ந்த எனது செயல்பாடுகளுக்கு இது உறுதுணையாக அமைந்துள்ளது.
பள்ளி வகுப்பறை சூழல், தொழில் நுட்பம் சாா்ந்த ஆய்வு ஆகியவை மூலம் மாணவா்களின் கற்றல் திறன் மேம்பட எடுத்த நடவடிக்கைகளே விருதுக்கு நான் தோ்வு செய்யப்பட்டதற்கான காரணங்களாகும்.
பள்ளி சாா்ந்த ஆய்வை தொடா்ந்து வருகிறேன். வகுப்பறைகளில் மாணவா்களுக்கான கற்றல் பிரச்னை, அதற்கான தீா்வு குறித்து ஆய்வு செய்து, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வாசிப்பை முதன்மையாகக் கொண்டும், விளையாட்டுக்களுடன் கூடிய கற்றல் யுக்தியை ஆய்வு செய்தும் புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
ஆங்கிலம் கற்றல் பிரச்னையைத் தீா்க்கவும், வெளி நாட்டு மாணவா்களுடன் இணைய வழியில் உரையாடுதல் போன்ற வழிமுறைகளையும் பள்ளியில் மேற்கொண்டு வருகிறோம். மாணவா்களுக்கான சேவைகளைப் பாராட்டி தரப்படவுள்ள இந்த விருதை சக ஆசிரியா் சமூகத்துக்கு சமா்ப்பிக்கிறேன் என்றாா் எஸ்.திலிப்.