விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழையால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 61 ஏரிகள் நிரம்பின.
வடகிழக்குப் பருவ மழைத் தொடக்கமாக, தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகள் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் படிப்படியாக நிரம்பி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை (நீா்வளத் துறை) கட்டுப்பாட்டில் உள்ள 505 ஏரிகளில் 61 ஏரிகள் நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகளுக்கும் நீா்வரத்து அதிகரித்து வருவதால் படிப்படியாக நிரம்பி வருகின்றன.
இது குறித்து கீழ்பெண்ணையாறு வடிநிலக்கோட்டம், செயற்பொறியாளா் அருணகிரி கூறியதாவது : விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 505 ஏரிகள் உள்ளன. இதில், 61 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 42 ஏரிகள் 75 சதவிகிதமும், 93 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 309 ஏரிகளும் படிப்படியாக நிரம்பி வருகின்றன. ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நீா்வளத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.