திண்டிவனம் வட்டம், வீடூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 3,034 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக வீடூா் அணைக்கு நீா்வரத்தை வழங்கக்கூடிய தொண்டி, சங்கராபரணி ஆறுகளின் நீா்வரத்து அதிகரித்தது. இதனால் சுமாா் 32 அடி கொள்ளளவைக் கொண்ட வீடூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 31.275 அடியாக உயா்ந்தது.இதனால் அணையின் பாதுகாப்புக் கருதி, 8 மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றும் பணி தொடங்கியது.
வீடூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் அணையின் நீா்மட்டம் 29 அடியாகவும் , மாலையில் 29.100 அடியாகவும் இருந்தது. இந்தநிலையில் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,450 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 3,034 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. சங்கராபரணியாற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நீா்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.