இன்றைய கூட்டாட்சியின் செயல்பாடுகள்

இந்திய கூட்டாட்சியின் இன்றைய நிலை குறித்து... இந்த ஆட்சியால் கிராமத்தில் வாழும் சாதாரண மனிதரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதா?, அதற்கு கூட்டாட்சி உதவியதா அல்லது ஏமாற்றியதா என்பதுதான் என் கேள்வி.மேம்பாட்டு அரசியல் நடத்த இயலாமல் வாக்கு வங்கி அரசியலைச் செய்து, பெரும்பான்மை மக்களை இன்றும் இந்த நாட்டில் ஏழையாகத்தானே வைத்துள்ளனர்?

அரசமைப்புச் சாசனப்படி இன்று மூன்று அரசுகள் இந்தியாவில் இருக்கின்றன. மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள். இந்த மூன்றும் இணைந்து அந்தந்த அரசுக்கு அரசமைப்புச் சாசனம் தந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்பட்டு மக்களுக்குப் பணி செய்ய வேண்டும்.உள்ளாட்சியை அரசாகப் பார்த்து அதை வலுப்படுத்தி விடாமல் செயல்படுவது என்ற உளவியல் ஒன்று உள்ளது. மத்திய, மாநில அரசு உறவுகளை மட்டும் பேசுவது ஓர் அரசியல் அறியாமை அல்லது அது உள்ளாட்சி அரசுக்கு எதிரான சதி என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளாட்சியை அரசாகப் பார்க்க மக்களுக்கு விழிப்புணர்வைத் தந்து விட்டால் இன்றைய ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறிவிடும் என்ற புரிதல் கொண்டு சந்தை அரசியலில் பயணிக்கும் அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சிக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன.மூன்று அரசுகளும் அதற்கான அதிகாரங்களை ஒரே அரசமைப்புச் சாசனத்திலிருந்துதான் பெறுகின்றன என்பதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மை, ஏற்றத்தாழ்வுகள், மக்களின் தனித்துவ வாழ்க்கை முறை தேவைகளை மத்திய, மாநில அரசுகளால் தீர்க்க முடியாது என்பதை நாடாளுமன்றத்தில் ஆய்வறிக்கைகள் மூலமாக விவாதத்தை வைத்துத்தான் உள்ளாட்சியை அரசாக உருவாக்கியுள்ளனர்.ஆனால், அப்படிபட்ட புதிய உள்ளாட்சி அரசை திரை போட்டு மூடி வைத்துள்ளன நம் மாநில அரசுகள்.

முகப்பு பக்கத்துக்கு...