நகங்களை அழகுபடுத்துவதில் பெண்கள் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதிலும் 'நெயில் ஆர்ட்' என்பது தற்போது பிரபலமாக உள்ளது.
ஆனால், அந்த நகங்களை அழகுபடுத்துவதற்கு அவை உடையாமல் இருக்க வேண்டும். நகம் உடைவதால் பலரும் அவதிப்படுகின்றனர்.
ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான ரசாயனப் பயன்பாடு (நெயில் பாலிஷில் ரசாயனங்கள்) உள்ளிட்ட காரணங்களால் நகங்கள் உடையலாம்.
இதனைத் தவிர்க்க, நல்ல ஊட்டச் சத்துள்ள குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவைச் சாப்பிடுவதுடன், கைகளையும் நகங்களையும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
அசிட்டோன் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவர்களைப் பயன்படுத்த வேண்டும். வீட்டு வேலை செய்யும்போது நகங்களில் அழுக்கு அல்லது ரசாயனம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாதம் வடித்த தண்ணீர், தலைமுடிக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல இந்த தண்ணீர், நகங்களையும் உடையாமல் பாதுகாக்கும்.
அரிசி நீரில் அமினோ அமிலங்கள், தாதுக்கள், ஆன்டி - ஆக்சிடன்ட், கார்போஹைடிரேட் உள்ளிட்டவை இருப்பதால் நகங்களை வலிமையாக்குகின்றன.
சாதம் வடித்த அந்த தண்ணீர் ஆறியதும், 10 முதல் 15 நிமிடங்கள் வரை நகங்களை அதில் நனைக்க வேண்டும். அதன்பின்னர் சிறிதுநேரம் விட்டு பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு நகங்களை அலச வேண்டும். தொடர்ந்து எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக இவ்வாறு செய்துவர நகங்கள் உடையாமல் இருக்கும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்யலாம்.