நாட்டிலுள்ள 146 மாவட்டங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நாட்டில் உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 7 மாநிலங்களிலுள்ள 146 மாவட்டங்களில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த மாவட்டங்களில் கருவுறுதல் விகிதம் (அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) 3 மற்றும் அதற்கும் மேற்பட்டு உள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையை நிலைப்படுத்துவதில், மேற்கண்ட மாவட்டங்கள் பெரும் தடைக்கற்களாக உள்ளன.
எனவே, இந்த 146 மாவட்டங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேம்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் கருவுறுதல் விகிதம் எதனால் அதிகமாக இருக்கிறது? என்று அரசு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், இதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதன்படி, இந்த மாவட்டங்களிலுள்ள புதுமணத் தம்பதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் வழங்கப்படும் என்றார் ஜே.பி.நட்டா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.