சிஎன்ஜி கருவி ஊழல் புகார் தொடர்பாக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தில்லி நீர்வளத் துறை முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா ஆவணங்களை சமர்ப்பித்தார்.
தில்லி அரசின் நீர் வளம், கலாசாரத் துறை அமைச்சராக பதவி வகித்த கபில் மிஸ்ராவை மே 6-ஆம் தேதி அமைச்சரவையில் இருந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திடீரென நீக்கி நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, அரவிந்த் கேஜரிவாலிடம் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ரூ.2 கோடியை மே 5-ஆம் தேதி அளித்ததை நேரில் பார்த்ததாக கபில் மிஸ்ரா குற்றம்சாட்டினார்.
மேலும், தண்ணீர் லாரி கொள்முதல் ஒப்பந்த ஊழல் விவகாரம் தொடர்பாகவும் கேஜரிவால் உள்ளிட்டோர் மீது கபில் மிஸ்ரா குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், தில்லியில் ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு பொருத்தப்படும் சிஎன்ஜி கருவியை விற்பதற்கான அனுமதியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு தில்லி அரசு வழங்கியிருந்ததாகவும் கனடாவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி சீனாவில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் சிஎன்ஜி கருவிகளை அந்த நிறுவனம் தில்லியில் விற்றுள்ளதாகவும் கபில் மிஸ்ரா குற்றம்சாட்டினார்.
மேலும், அந்த நிறுவனம் கனடாவில் இயங்கவில்லை என்பதும், மும்பையில் உள்ள அதன் மற்றொரு நிறுவனம் சிஎன்ஜி கருவிகளை கனடாவில் இருந்து தருவிப்பதற்குப் பதிலாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாகவும் கபில் மிஸ்ரா கூறினார்.
ஆம் ஆத்மி அரசு 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் சிஎன்ஜி கருவியை விற்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அறிவித்திருந்தது என்று கபில் மிஸ்ரா குறிப்பிட்டார்.
இந்நிலையில், தனது குற்றச்சாட்டுகள் தொடர்புடைய ஆவணங்களை தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கபில் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை நேரில் அளித்தார். அந்த ஆவணங்கள் தொடர்பாக சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.