குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை ஆதரிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தயாராக உள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெüடா தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள மஜத தயாராக உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் அதை எதிர்க்கமாட்டோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் புறக்கணித்து, மஜதவுக்கு மக்கள் ஆதரவளிக்கவிருக்கின்றனர்.
சட்டப் பேரவைத் தேர்தலில் மஜத பெரும்பான்மை பலத்துடன் கர்நாடகத்தின் ஆட்சியைக் கைப்பற்றும். எனது குடும்பத்தினர் சட்ட விரோதமாக ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகள் குவித்துள்ளதாக வருமான வரித் துறையிடம் காங்கிரஸ் பிரமுகர் வெங்கடேஷ் கெüடா புகார் அளித்திருக்கிறார்.
அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இந்த விவகாரம் குறித்து மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி விளக்கம் அளித்திருக்கத் தேவையில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து திறமையான ஒருவரை களமிறக்குவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லியில் வெள்ளிக்கிழமை அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் மஜத சார்பில் கட்சியின் எம்.பி. புட்டராஜு கலந்து கொள்ளவிருக்கிறார். எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அந்த முடிவை மஜத ஆதரிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.