சரக்கு-சேவை வரி அமலுக்கு வந்தால் தங்களுக்கான செலவு அதிகரிக்கும் என்று பரஸ்பர நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-யை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜிஎஸ்டி இந்தியப் பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கூறிவந்தாலும், அதனால் சில குறிப்பிட்ட துறைகளில் பாதிப்பும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வகிப்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை மிகக்குறைந்த சதவீதத்தில் செலவு விகிதம் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) என்ற பெயரில் பணத்தை வசூலிக்கின்றன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் 3 சதவீதம் அளவுக்கு "எக்ஸ்பென்ஸ் ரேஷியோ' அதிகரிக்கும் என்று பரஸ்பர நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், ஜிஎஸ்டி- வரி விதிப்பில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வருவாய் ஈட்டும் பரஸ்பர நிதி விநியோக நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பிபிஎஃப்ஏசி பரஸ்பர நிதி நிறுவனத்தின் தலைவர் நீல் பராக் பாரிக் கூறியதாவது:
இப்போது, பரஸ்பர நிதிக்கு சேவை வரி 15 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஜிஎஸ்டி-யில் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டால் கூடுதலாக 3 சதவீதம் வரி அதிகரிக்கும். இதனால், முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வகிப்பதற்கான பரஸ்பர முதலீட்டு நிறுவனங்களின் செலவு உயரும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.