நாடு முழுவதும் புதிதாக 100 யோகா மையங்களை அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச யோகா தினம், அடுத்த மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பாராம்பரிய கலையான யோகாவை உலகம் முழுவதும் பரப்பும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன் விளைவாக பல்வேறு நாடுகளின் ஒப்புதலுடன் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அந்த தினத்தை கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு வெகு விமர்சியாகக் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் நிகழாண்டும் நாடு முழுவதும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நிகழ்வு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 51,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர 150 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர், நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க், லண்டனின் ட்ராஃபல்கர் சதுக்கம் உள்ளிட்ட சர்வதேச அளவில் புகழ் பெற்ற இடங்களிலும் யோகா கொண்டாட்டங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதற்கு நடுவே, யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் புதிதாக 100 யோகா பயிற்சி மையங்களை அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய "ஆயுஷ்' (ஆயுர்வேதம், யுனானி, யோகா, சித்தா, ஹோமியோபதி) துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்úஸா நாயக் தில்லியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
யோகா கலையைப் போற்றுவதிலும், கடைப்பிடிப்பதிலும் உலகத்துக்கே இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை. நமது முயற்சியால் உதயமான சர்வதேச யோகா தினத்தை இந்த ஆண்டு 190-க்கும் அதிகமான நாடுகள் கொண்டாட உள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.