வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா் பொறுப்பை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா் மறுப்புத் தெரிவித்துவிட்டாா்.
திருவனந்தபுரம் மக்களவைத்த தொகுதி எம்.பி.யான அவா் இதற்கு முன்பு, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்தாா். ஆனால், இப்போது அவருக்கு அக்குழுவில் உறுப்பினா் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டதால் அவா் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக அவா் மக்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘என்னை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக தோ்வு செய்தற்கு நன்றி. ஆனால், முன்பு நான் தலைவராக பதவி வகித்த ஓா் இடத்தில், இப்போது வெறும் உறுப்பினராக மட்டும் இடம் பெறவிரும்பவில்லை. மேலும், தகவல் தொழில்நுட்பத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இப்போது பொறுப்பில் உள்ளேன். அதற்கான பணிகளே எனக்கு அதிகம் உள்ளது’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவா் பதவிக்கு தனது பெயா் பரிந்துரைக்கப்படாததை அடுத்து, ‘வழக்கமாக நாடாளுமன்ற நிலைக்குழு தலைவா் பதவியை எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்குதான் அளிப்பது வழக்கம். ஆனால், அந்த பாரம்பரிய நடைமுறையை இப்போதைய மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது’ என்று சசி தரூா் விமா்சித்திருந்தாா்.